கணவன், மனைவி

கணவன், மனைவி

கணவன், மனைவி

ஓரு கர்ப்பிணிப் பெண் நீண்ட தொலைவில் இருந்து இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்து விட்டு, அடுத்த இரண்டு குடம் தண்ணீரை கொண்டு வர சென்றுவிட்டாள்.  

அந்தநேரம் அவளின் கணவன் வேலையில் இருந்து மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெய்யில். பசி வேறு அவனுக்கு. வெய்யிலில் வந்ததால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் கதவை திறந்து செல்ல குடம் தட்டுப்பட்டு விழுந்து விடுகிறான். இரண்டு குடம் தண்ணீரும் கொட்டி விடுகிறது.  

அவனுக்கு மனைவி மீது கடுமையான கோபம் வந்து விடுகிறது. கொஞ்சமாவது இவளுக்கு அறிவு வேணாம்? இப்படியா கதவுக்கு முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு மெதுவாக வருகிறாள் மனைவி.  

தூக்கி வந்த குடத்தைக் கூட இறக்க விடாமல் அவளைத் திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்க வீட்டில எப்படித் தான் பெத்து, வளர்த்தாங்களோ!  உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என கண்ட படி திட்டுகிறான். இதைக் கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வாந்தி மயக்கத்தோட எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வர்றேன் தெரியுமா? 

கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்து விடுகிறான்.  உடனே அவள் “இனி ஒரு நிமிஷம் கூட உன் கூட நான் வாழ மாட்டேன் என்று சொல்லிவிட்டு வாயும் வயிறுமாக அவளின் அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறாள்.  

இது கணவன், மனைவிக்குள் ஒரு சின்ன பிரச்சினை எவ்வளவு பெரிய முடிவை எடுக்க வைத்து விட்டது என்பதைக் கூறும் கதை.  

சரி! ! ! இந்தக் கதையின் முடிவு இப்படி இருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.  

அவன் குடம் தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டி விட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டு குடம் தண்ணீரையும் கொட்டி விட்டோமே! "சே!  பாவம் அவள். வயிற்றில் குழந்தையோடு தண்ணீர் எவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு வருகிறாள்? முதல் வேலையா அவள் வந்தவுடன் மன்னிப்பு கேட்டு விட்டு நாமே போய் இரண்டு குடம் தண்ணீர் எடுத்து கொடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.  

இவன் ஓடிப் போய் அந்தக் குடங்களை இறக்கியவாறு நடந்ததைச் சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின் மேல் விழுந்து தண்ணீரைக் கொட்டி விட்டேன். பாவம்!  நீ எவ்வளவு தூரத்தில் இருந்து இந்த தண்ணீரைக் கொண்டு வருகிறாய் என்னை மன்னித்து விடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டு வருகிறேன் என்கிறான்.  

உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர் போனா போகட்டுங்க. நீங்க என்ன வேணும்னா கொட்டி விட்டீங்க!  தெரியாமத்தானே!  அங்க தண்ணிய வச்சது என் தப்பு. நான் போய் மெதுவா அப்புறமா எடுத்துக் கொள்கிறேன். நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள். அவன் அப்படியே நெகிழ்ந்து போகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவு கடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.  

இவ்வளவுதான் நம் வாழ்க்கையும்!  கணவனோ, மனைவியோ தெரிந்து யாரும் தப்பு செய்வதில்லை. இருவரில் ஒருவர் ஒரு படி இறங்கினால், மற்றவர் கண்டிப்பாக பத்துப்படி இறங்கி வருவார்.  

நம்மைப் பார்த்து தான் நம் பிள்ளைகள் வளர வேண்டும்.புரிதலும், விட்டுக் கொடுத்தலுமே வாழ்க்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *