கழுதை பேசியது என்ன?
ஒரு பேச்சாளர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் கூட்டத்தில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர். அதைப் பார்க்க அவருக்கு வருத்தமாயிருந்தது. அதைக் கூடப் பொறுத்துக் கொண்டார். சிலர் விட்ட குறட்டை சப்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது. அது அவருடைய சொற்பொழிவுக்கு இடைஞ்சலாக இருந்தது.
உடனே அவர் சம்பந்தம் இல்லாமல் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். அவர்,''ஒரு நாள் நான் ஒரு பாலைவனத்தில் சென்று கொண்டிருந்தேன். அங்கே யாரும் இல்லை. நானும் எனக்குத் துணையாகக் கழுதை மட்டுமே அங்கு இருந்தோம். திடீரெனக் கழுதை என்னுடன் பேச ஆரம்பித்தது. ''என்று சொன்னவுடன் எல்லோரும் விழித்துக் கொண்டனர்.
ஒருவர் கூட இப்போது தூங்கவில்லை. அப்போது அவர் கதையை அந்த நிலையிலேயே விட்டு விட்டு தன் முதல் சொற்பொழிவைத் தொடர ஆரம்பித்தார். உடனே சிலர் மிகுந்த ஆவலுடன் எழுந்து''அந்தக் கழுதை உங்களிடம் என்ன பேசியது?''என்று கேட்டனர்.
உடனே அவர் சற்று கோபத்துடன்''நான் என்ன கூறுகிறேன், என்பதில் உங்களில் யாருக்கும் ஆர்வம் இல்லை. ஆனால் கழுதை என்ன பேசியது என்பதை அறிய மட்டும் தூக்கத்தைக்கூட விட்டுவிட்டு ஆர்வத்துடன் கேட்கிறீர்களே, உங்களுக்கே இது நியாயமாய் இருக்கிறதா?''என்று கேட்டார். எல்லோரும் தலை கவிழ்ந்தனர்.
மனம் தேவையற்றதைத்தான் யோசிக்கும். நேசிக்கும். வம்பு பேசத்தான் அது எப்போதும் பசியோடிருக்கும். ஒன்றுக்கும் உபயோகமில்லாத விஷயத்தை மிகக் கவனத்துடன் கேட்கும்.